Monday 9 November 2015

"தீபாவளி" அரசியல் - அ.பரிவழகன் – Deepavali Politics


தமிழ்நாட்டில் தீபாவளி வரும் மாதத்தில் மக்கள் உற்சாகமாக தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தயாராகி விடுவர், அதே சமயம் சில அமைப்புகள், சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தீபாவளிப் பண்டிகையை விமர்சித்தும், கேலிபேசியும், தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவர். ஆனால் மக்கள் இவர்களின் பேச்சையெல்லாம் கேட்பதில்லை, ஆண்டுக்கு ஆண்டு தீபாவளி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

"நன்மை ஓங்கி தீமை அழியும்" செய்தியை உலகுக்கு உணர்த்தும் நன் நாளாக, ''எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அதர்மத்தை அழித்துத் தர்மத்தைக் காக்க நான் அவதரிப்பேன்" என்று ஸ்ரீ மத் பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியதற்கு ஏற்ப, ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மத்தை அழித்த நன் நாளாம் தீபாவளித் திருநாள்.

நரகாசுரன் என்ற கொடியவனை ஸ்ரீ கிருஷ்ணர் வதம் செய்து அழித்த நன் நாளே தீபாவளி, ஆகா அடிப்படையே தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தும் திருவிழா. நம் கலாச்சாரத்தின் அடிப்படையே தர்மம் தழைக்க வேண்டும் என்பதே அதை ஆண்டுதோறும் நமக்கு நினைவுப் படுத்தி நல்வழிப் படுத்தும் திருவிழா தீபாவளி. இப்படி நம் தர்மத்தின் அடி நாதமாக விளங்கும் ஓர் விழாவை வேண்டுமென்றே சிலர் முற்போக்கு என்ற போலி முக மூடியை அணிந்து கொண்டு விமர்சனம் செய்வது வாடிக்கையாகி வருகிறது.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக்கூடாது என்பவர்கள் தங்களின் சொந்த விழாக்களில், தங்கள் வீட்டின் நிகழ்ச்சிகளில், தாங்கள் சார்ந்த அமைப்புகளின், கட்சிகளின், சங்கங்களின் விழாக்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது ஏன் ? தங்களின் திருமண நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து கட்சி நிகழ்ச்சி வரை அனைத்திலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் 'முற்போக்குகள்' தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடித்தால் உடனே சமூக அக்கறையோடு பேசுவது விசித்திரமானது. தீபாவளியன்று " புகை புகை " என்று கூச்சலிடும் இவர்கள் நாளை முதல் இவர்கள் பயன்படுத்தும் புகையைக்கக்கும் வாகனங்களை விடுத்து நடந்து செல்வார்களா? தாங்கள் கட்சித் தலைவரின் பிறந்த நாளுக்குப் பட்டாசு வெடிக்க மாட்டார்களா ?     

உலகம் முழுவதும் பரவி வாழும் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவான தீபாவளியை "இந்து தர்மத்தின்" விழா என்ற ஒரே காரணத்திற்காகவும், இந்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு இதை விமர்சையாகக் கொண்டாடுகின்றனர் என்பதற்காகவும், இந்து தர்மக் கடவுள்களை விமர்சனம் செய்ய வேண்டும்  என்ற நோக்கத்தோடு தீபாவளிப் பண்டிகையைச் சிலர் திட்டமிட்டுக் கேலி செய்கின்றனர்.

நம்முடைய இந்து தர்மத்தில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சிவராத்திரி, நவராத்திரி, சபரிமலை விரதம், பொங்கல் விழா, தீபாவளி, அம்மன் விரதம், கார்த்திகை, மார்கழிமாத விழாக்கள், அமாவசை விரதம், பௌர்ணமி விழா (இவை சில மட்டும்) என எத்தனையோ விழாக்களை நாம் பல ஆண்டு காலமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.     

இவ்விழாக்களுக்கெல்லாம் முதன்மையாக விளங்குவது தீபாவளி. நம் முன்னோர்கள் இத்தகைய பண்டிகைகளின், விழாக்களின் மூலம் நம் மக்களிடம் அன்பையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும், வளர்த்தனர். ஊருக்கு ஊர் "ஊர் கூடித் தேரிழுத்து" சாதி வேற்றுமை ஒழிய வழி வகுத்தனர். லோகமான்ய பாலா கங்காதர திலகரின் முயற்சியால் ஆங்கிலேய கொள்ளையர்களை எதிர்க்க நம் பாரத மக்களை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்டதே விநாயகர் சதுர்த்தி "விநாயகர் ஊர்வல" நிகழ்ச்சி. அன்று முதல் இன்று வரை விநாயகர் ஊர்வலம் நம் மண்ணில் சிறப்பாக நடைபெறுகிறது.

உலவுத் தொழிலுக்கு நன்றி சொல்ல - பொங்கல்
நாம் செய்யும் தொழிலுக்கு நன்றி சொல்ல - ஆய்த பூஜை
கல்விக்கு நன்றி சொல்ல - சரஸ்வதி பூஜை
என ஒவ்வொரு விழாவிலும், ஓர் உட்ப் பொருளை மறைத்து வைத்தனர் நம் முன்னோர்.

நம் கலாச்சாரமே விழாக்கள் நிறைந்தது தான், ஒவ்வொரு மாதத்திலும் ஏதேனும் ஓர் பண்டிகை இருக்கும். பண்டிகைகளின் நோக்கமே மக்களை நல்ல ஆரோக்கியமான மனநிலையில் வைத்திருக்கத்தான், தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விலகி ஆரோக்கியமாக ஆன்மிகத்திலும் குடும்ப நலனிலும் ஈடுபடும் நோக்கத்துடனையே நம் மண்ணில் விழாக்கள் உருவாகின.  நம் மண்ணின் மரபு சார்ந்த அனைத்து விழாக்களையும் நாம் கொண்டாடி மகிழ்வோமாக.


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் ...     

No comments:

Post a Comment