நம் தமிழ்நாட்டில் இரண்டு விதமான அரசியல் பேசப்படுகின்றன ஒன்று பாரதம் தழுவிய தேசியம், இரண்டு திராவிடம் சார்ந்த இனவாதம். இதல் தேசியம் என்பது பாரதத்தின் அனைத்து மக்களையும் இணைக்கும் தேசிய நீரோட்ட அரசியல், திராவிட இனவாத அரசியல் தொடங்கப்பட்ட காலத்திலேயே தத்துவார்த்த ரீதியில் பொய்த்துப் போய்விட்டது. இருப்பினும் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அரசியல் மேடைகளில் மட்டும் வாழ்கிறது, சமூக தளத்தில் என்றோ பொய்த்துவிட்டது.
சமூகச் சூழலில் யாரும் இன்று திராவிடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, திராவிடப் பாரம்பரியத்தில் இருந்து வந்த வாரிசுகள் இன்று திராவிடம் என்றால் என்ன ? என்று கேட்கின்றனர். "தமிழுக்காக" இந்தியைத் திட்டியவர்களின் பிள்ளைகள் இன்று ஆங்கிலக் கல்விமுறையில் இந்தியை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கின்றனர். கடவுளைத் திட்டியவர்கள், குறிப்பாக இந்துமத வழிபாட்டைத் திட்டியவர்கள் , கேலிபேசியவர்கள் இன்று ஏறாத கோயில் இல்லை, செய்யாத வழிபாடு இல்லை, பார்க்காத ஜோதிடர் இல்லை. திராவிடத்தின் அடிப்படைக் கொள்கையாக அவர்கள் சொல்வது சாதி ஒழிப்பு, ஆனால் "திராவிட"க் கட்சிகளின் ஆட்சியில் தான் சாதி அமைப்புகள், சாதி சங்கங்கள் தோன்றி, வளர்ந்து, செழித்து, ஆட்சியில் யார் அமர வேண்டும், யார் அமைச்சராக வரவேண்டும் என்பதனைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றன.
சுய மரியாதைத் திருமணம் மூலமாக, சாதி விட்டு சாதி திருமணம் செய்வதன் மூலம் சாதியை ஒழிக்கலாம் என்றனர், ஆனால் சாதி விட்டு சாதி திருமணம் செய்தவர்கள் தங்களின் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது கணவர் எந்த சாதியோ அதே சாதியில் தான் பிள்ளைகளைப் பதிவு செய்தனர், செய்கின்றனர். சாதி தேவையில்லை என்ற ஒரு பிரிவு இருகின்றது அதில் இவர்கள் தங்களின் பிள்ளைகளைப்
பதிவு செய்யாதது ஏன் ? யார் யார் எல்லாம் சாதி ஒழிய வேண்டும் என்று அரசியல் மேடைகளில் பேசுகிறார்களோ, அவர்கள் எல்லாம் முதலில் தங்களின் பிள்ளைகளை, பேரன்களைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது எந்த சாதியையும் சாராதவர், சாதி தேவயில்லை என்று பதிவு செய்யத் தயாரா?
கல்லூரிகளிலும், அரசு நிறுவனங்களிலும் "எந்த சாதியையும் சாராதவர்" என்று தனியாக சாதி சாராதவர்களுக்கு இட ஒதிக்கீடு கொண்டு வரத் தயாரா ?
சாதி ஒழிப்புப் பற்றி பேசும் திராவிடக் கட்சிகள் இதுவரையில் சாதி ஒழிப்பிற்குச் சட்ட ரீதியாகச் செய்த நடவடிக்கைகள் என்ன ? நடைமுறைப் படுத்திய சட்டங்கள் என்ன ? சமூகப் போராட்டம் என்று மக்களைத் திரட்டும் இவர்கள் சட்ட ரீதியில் சாதியை எதிர்க்காமல் மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஒருவர் நினைத்தால் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு எளிதாக மாறிவிட முடியும், ஆனால் ஒரு சாதியில் இருந்து இன்னொரு சாதிக்கு மாற முடியாது. ஆகா மதத்தை விட வலிமையானது சாதி, அப்படிப்பட்ட சாதியை ஒழிக்க எந்த முயற்சியும் செய்யாத "திராவிடர்கள்" தான், இந்து மதத்திற்கு எதிராகப் போராடுகின்றனர்.
இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள் இன்றும் தங்களின்
சாதிய அடையாளங்களுடனேயே இருகிறார்கள். மேலும் தாங்கள் புதிதாக ஏற்றுக்கொண்ட மதத்தில் உள்ள பிரிவுகளிலும்,
பழக்கவழக்கங்களிலும் ஈடுபட்டு, பழைய சாதிய அடையாளத்தையும் சுமந்து கொண்டு குழப்பத்தில் இருகின்றனர். மதம் மாறியவர்கள் இன்னமும் சாதியைத் தொலைக்கவில்லை என்றால் அதற்கும் இந்து மதம் தான் காரணமா ? இப்படி மனிதர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற சாதியை எதிர்ப்பதற்குப் பதிலாக, இந்து தர்மத்தை எதிர்க்கின்றனர். காரணம் - இந்து தர்மம் மனிதனை நான்கு விதமாகப் பிரிக்கின்றது என்று நம் தர்மத்தின் மீது குறை கூறுகின்றனர்.
இந்து
தர்மம் சொல்லக் கூடிய நான்கு வர்ணங்களுக்கும் இன்றை நடைமுறையில் உள்ள சாதிப் பிரிவினைக்கும்
எந்தத் தொடர்பும் இல்லை, சாதிய உருவாக்கத்திற்கு மனித மனோபாவமே காரணம் கடவுள் அல்ல,
மனிதனின் தவறுக்குக் கடவுள் எப்படி, கலாச்சாரம் எப்படி காரணமாக முடியும் ? இன்று நம்
நாடு முழுவதும் லட்சக்கணக்கில் சாதிகள் இருக்கின்றன அதற்கு இந்து கடவுளா காரணம்
? (விரிவாகப் பார்க்க - பாரதத்தின் சாதிய முறை - http://parivazhagan.blogspot.in/2015/09/5-1-caste-system-in-india-1.html)
இனிமேலாவது சாதி ஒழிய வேண்டும் என்று உண்மையாக நினைப்பவர்கள், சாதிக்கு எதிராகப்
பேசுபவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து
செயலாற்றினால் நல்லது, மாறாக இந்து தர்மத்தை குறை கூறி பிழைப்பு நடத்தினால், அரசியலில்
, சமூகத்தில் தோல்வியைத் தழுவுவது நிச்சயம். Read more - http://parivazhagan.blogspot.in/2015/07/blog-post.html
No comments:
Post a Comment