Wednesday 6 August 2014

கல்வி நம் விருப்பம், நம் உரிமை !

"கல்வியென்பது அனைவரின் அடிப்படை உரிமை" இன்று அந்த உரிமையை யார் உரிமை கொண்டாடுவது என்பதில் தான் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே சலசலப்பு ஏற்படுகிறது. 

தங்களுடைய பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை, ஒரு விதத்தில் சரியும் கூட, ஆனால் மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு தங்களுடைய மகனும்,மகளும் இப்படிதான் ஆகாவேண்டும் என்று எண்ணுவது, விரும்புவது தவறு.

இன்று அனைத்துப் பெற்றோர்களிடமும் தங்களுடைய பிள்ளை பொறியியல் படிப்புப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, இதில் தவறில்லை ஆனால் அதே சமயம் தங்களுடைய பிள்ளைகளின் விருப்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

"பக்கத்துவீட்டு உறவினர் மகள், எதிர்வீட்டு அத்தையின் மகன்,சித்தப்பாவின் பையன்,ஒன்றுவிட்ட மாமாவின் மகன்" பொறியியல் படிக்கிறார்கள் என்பதற்காகத் தங்களுடைய பிள்ளையும் பொறியியல் படித்தே ஆகா வேண்டும் என்பது சரியல்ல, வலுக்கட்டயமாக அவர்களைப் பொறியியல் படிக்க அனுப்பக்கூடாது. சிலருக்கு இயல்பாகவே பொறியியல் படிப்பின் மீது நாட்டம், ஈர்ப்பு, இருக்கும், சிலர் யாரையாவது (இயல்பாகவே உந்துதல் ஏற்பட்டு) பார்த்து  இவர்கள் போல ஆகா வேண்டும் என்று விரும்புவர். சிலர் ஏதாவது படித்தால் போதும் என்று இருப்பர்.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பதினொன்றாம் வகுப்பு முடிக்கும் முன்பே தங்களுடைய பிள்ளையின் விருப்பம், கனவு, இலட்சியம்,போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் அமர்ந்து மனம் விட்டுப் பேச வேண்டும், தினந்தோரும் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களும் சிறியவர்களும் ஒரு அரை மணி நேரமாவது அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் சந்தோசமாக மனம் விட்டு வீட்டு விஷயங்களைப் பற்றி பேசினால் அந்தக் குடும்பத்தில் சண்டை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதனால்த்தான் நம் முன்னோர், அனைவரும் குடும்பத்தோடு  அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினர். ஆனால் இன்றோ நம்முடைய பொக்கிஷமான பல மணி நேரங்களைத் தொலைக்காட்சிப் பெட்டிமுன் ரிமோட்டின் பிடியில் இழக்கிறோம்.

நாம் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசும்போது அவர்களின் உண்மையான விருப்பம் எது, எந்தத் துறையைச் சார்ந்தப் படிப்புகளை அவர்கள் விரும்புகிறார்கள், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். பிள்ளைகளும் தங்கள் விருப்பம் சார்ந்தப்  படிப்பை பெற்றோரிடம் சொல்ல வேண்டும். ஆகா முதலில் பெற்றோரும் பிள்ளைகளும் கலந்து பேசி, சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும், இது தான் முதல் நிலை. பிறகு அதற்கான வழிமுறைகள் என்ன, அந்த படிப்புக்கு என்ன மார்க் (மதிப்பெண்) பெற வேண்டும், இந்தப் படிப்புக்கு எந்த  கல்லூரி சிறந்தது, இந்தப் படிப்புக்கு ஏற்ற பல்கலைக்கழகம் எது என்று முடிவு செய்ய வேண்டும்.   

தமிழகத்தைப் பொருத்தவரையில் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு கிடையாது. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதுமானது. அதே போல தமிழகத்தில் மருத்துவப்படிப்பிற்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதுமானது. பொறியியல் மருத்துவ படிப்புகளுக்கு தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு கிடையாது.  
சில தனியார் பல்கலைக்கழகங்கள் அவர்களுகென்று தனியாக நுழைவுத் தேர்வை நடத்துகின்றன அவற்றையும் கவனிக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைக்குப் பிடித்த, ஏற்றப் படிப்பு ஏதேனும் கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் இருந்தால் அதற்கு ஏதேனும் நுழைவுத் தேர்வு இருக்கிறதா ? எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் ? நம்முடைய நிலையை எப்படி உயர்த்துவது ? என்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 
மருத்துவத்தில் விருப்பம் இருப்பவரைப் பொருளாதரத்தில் கொண்டு சேர்ப்பது, கலைத் துறையில் விருப்பம் இருப்பவரை பொறியியலில் சேர்ப்பது, பொறியியலில் விருப்பம் இருப்பவரை சமையல் படிப்பில் சேர்ப்பது எப்படி ஒரு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
ஆகா நம்முடைய வாழ்வின் எதார்த்தத்தைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்து, அவர்களின் விருப்பத்திற்கும் மதிப்பளித்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நல் வழி காட்டுவது ஒவொரு பெற்றோரின் கடமையாகும்.

ஆல் தி பெஸ்ட்.  

அ.பரிவழகன்                          


No comments:

Post a Comment